செய்திகள்

தர்மபுரி-பாப்பாரப்பட்டி சாலையில் ரூ.20.31 கோடியில் புதிய ரெயில்வே மேம்பாலம் திறப்பு

Published On 2018-06-05 12:49 GMT   |   Update On 2018-06-05 12:49 GMT
தர்மபுரி-பாப்பாரப்பட்டி சாலையில் ரூ.20.31 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ரெயில்வே மேம்பாலத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் ஒன்றாக விளங்கும் தர்மபுரி-பாப்பாரப்பட்டி சாலையில் ரெயில்வே கேட் மூடப்படுவதால் அடிக்கடி வாகனபோக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் முத்துக்கவுண்டன்கொட்டாயில் புதிய இரண்டு வழித்தடசாலைகள் கொண்ட ரெயில்வே மேம்பாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த திட்டத்திற்காக ரூ.20.31 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் ஒரு ஆண்டிற்கும் மேலாக நடைபெற்று வந்தது. கட்டுமான பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து இந்த ரெயில்வே மேம்பாலத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிகாட்சி மூலம் புதிய ரெயில்வே மேம்பாலத்தை திறந்து வைத்தார்.

இந்த ரெயில்வே மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்ததால் தர்மபுரியில் இருந்து ஓசூர், பெங்களூரு, பாலக்கோடு, பாப்பாரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் பயன்பெறுகிறார்கள். இதேபோல் முத்துக்கவுண்டன்கொட்டாய், சோகத்தூர் மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் பயனடைகிறார்கள். இந்த மேம்பால திறப்புவிழாவையொட்டி முத்துக்கவுண்டன் கொட்டாயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் மலர்விழி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் கண்காணிப்பு பொறியாளர் சாருமதி, கோட்டப்பொறியாளர்கள் வத்சலாவித்யநந்த், நடராஜன், உதவி கலெக்டர் ராமமூர்த்தி, உதவி கோட்ட பொறியாளர்கள் பொற்கொடி, சரோஜா, குலோத்துங்கன், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News