குட்கா ஊழல் - காணாமல்போன ஆவணம் பற்றி முதல்வரின் செயலாளருக்கு கடிதம்
சென்னை:
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருளான ‘குட்கா’ சென்னையை அடுத்த செங்குன்றத்தில் உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டது சோதனையில் பிடிப்பட்டது.
வருமான வரித்துறையினர் நடத்திய இந்த சோதனையில் ரூ.39.97 கோடி ஊழல் நடந்திருப்பது தெரிய வந்தது. மேலும் அதிகாரி கள் கணக்குகளை ஆய்வு செய்ததில் அமைச்சர், ஐ.பி.எஸ். அதிகாரிகள், மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இதற்கு உடந்தையாக இருப்பது தெரிய வந்தது.
குட்கா ஊழல் விவகாரம் வெட்டவெளிச்சமான போது தலைமை செயலாளராக ராமமோகன்ராவ் இருந்தார். வருமான வரித்துறையிடம் இருந்து வந்த ரகசிய அறிக்கையை தொடர்ந்து அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவிடம் இதுபற்றிய விவரங்களை எடுத்து கூறினார்.
அவர் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறியதாகவும் அதற்குள்ளாக ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டதாகவும் ராம மோகன்ராவ் வருமான வரித்துறைக்கு பதில் கொடுத்திருந்தார்.
அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தது.
இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் குட்கா ஊழல் தொடர்பாக முதல்-அமைச்சரின் கூடுதல் செயலாளர் ஜெயந்தி முரளி தரனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் காணாமல் போன குட்கா ஆவணங்கள் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையின் கேள்விகளுக்கு இன்னும் கூடுதல் செயலாளர் பதில் அளிக்க வில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு கமிஷனர் ஜெயக்கொடி மாற்றப்பட்டார். #GutkaScam