சந்திராயன்-2 செயற்கைகோள் விரைவில் விண்ணில் ஏவப்படும்: மகேந்திரகிரி இயக்குநர் பேட்டி
மதுரை:
மகேந்திரகிரி திரவ இயக்க ஆராய்ச்சி இயக்குநர் பாண்டியன் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பி.எஸ்.எல்.வி-சி ராக்கெட் மூலம் 31 செயற்கைகோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தியது. இது இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியாகும். இதனால் நாம் பெருமைகொள்ள வேண்டும். இந்த ராக்கெட்டில் செலுத்தப்பட்ட திட திரவ எரிபொருட்கள், என்ஜின்கள் வடிவமைத்தது மகேந்திரகிரியில்தான்.
பிற நாடுகள் நம்மிடம் செயற்கைகோள்களை அனுப்ப முன்வருகிறது. இதற்கு காரணம் குறைந்த நாட்களில் நாம் செயற்கைகோள்களை அனுப்புவது தான். பிப்ரவரி இறுதியில் இன்னும் சில செயற்கைகோள்கள் செலுத்தப்பட உள்ளது.
நாம் செயற்கைகோள்களை அதிகமாக அனுப்புவது பிறநாடுகளுடன் போட்டி போடுவதற்கு அல்ல. சந்திராயன்-2 செயற்கைகோள் வெகுவிரைவில் ஏவப்படும். இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
மீனவர்கள், கல்வி, தொலைதொடர்பு உள்ளிட்டவைகளுக்கு பயன்படும் வகையில் அதிகமான செயற்கைகோள்களை அமைக்க இஸ்ரோ நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை இந்தியாவில் இருந்து 101 செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார். #ISRO #tamilnews