செய்திகள்

அ.தி.மு.க. இரு அணிகளும் இணைந்தாலும் முதல்வரை 122 எம்.எல்.ஏக்களே தீர்மானிப்பார்கள்: தம்பிதுரை

Published On 2017-05-29 05:25 GMT   |   Update On 2017-05-29 05:28 GMT
அ.தி.மு.க.வின் 2 அணிகளும் இணைந்தாலும் முதல்-அமைச்சர் யார் ? என்பதை எம்.எல்.ஏ.க்கள் முடிவு செய்வார்கள் என அரூரில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.
தர்மபுரி:

அரூர் முன்னாள் ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழு தலைவருமான வெள்ளை முருகன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்தார்.

அவரது வீட்டிற்கு சென்ற பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை வெள்ளை முருகன் உருவ படத்தை திறந்து வைத்து அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

கேள்வி: ஓ.பன்னீர் செல்வத்திற்கு தனியார் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் 37 சதவீத ஆதரவு கிடைத்துள்ளதால் 2 அணிகளும் இணைந்தாலும் அவரையே தமிழக முதல்-அமைச்சராக ஆக்க வேண்டும் என்று செம்மலை கூறி இருக்கிறார் இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- செம்மலை சொல்வதை வைத்து கட்சி, ஆட்சியை நடத்த முடியாது. அ.தி. மு.க.வின் 2 அணிகளும் இணைந்தாலும் முதல்- அமைச்சர் யார்? என்பதை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தான் முடிவு செய்வார்கள்.

கே:- ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி உங்கள் கருத்து என்ன?


ப:- ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினி அரசியலுக்கு வருவதால் எந்த கட்சிக்கும் பாதிப்பு இல்லை.

கே:- மாடுகளை வெட்ட பாரதிய ஜனதா அரசு தடை விதித்துள்ளதே?

ப:- மாட்டிறைச்சி பிரச்சனை குறித்து எனக்கு எதுவும் தெரியாது. தமிழகத்தில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதால் அவர்களின் ஒரு சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கே:- கட்சி நிகழ்ச்சிகளை முன்னாள் அமைச்சர் பழனியப்பன், முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் புறக்கணிப்பதாக கூறப்படுகிறதே?

ப:- தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி தொகுதி எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன், மற்றும் அரூர் முருகன் ஆகியோர் கட்சி நிகழ்ச்சிகளை புறக்கணிப்பதாக கூறுவது தவறு, வேறு பணி காரணமாக அவர்கள் எங்காவது சென்றிருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News