செய்திகள்

முசிறி அருகே லாரி மோதி தொழிலாளி பலி

Published On 2017-04-24 13:32 GMT   |   Update On 2017-04-24 13:33 GMT
முசிறி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
முசிறி:

முசிறி ஒன்றியம் திருத்தியமலை ஊராட்சி மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை (வயது33). இவர் சீமைக்கருவேல் முள் கட்டைகள் கரி மூட்டத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் நண்பர் வேளகாநத்தத்தை சேர்ந்த குமரேசன் (33) என்பவருடன் சொந்த வேலையாக முசிறிக்கு வந்துவிட்டு மீண்டும் மேட்டுப்பட்டிக்கு சென்றுள்ளார்.

ஆணைப்பட்டி அருகே சென்ற போது பின்னால் வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் சின்னதுரை, குமரேசன் இருவரும் தூக்கி எறியப்பட்டு பலத்த காயமடைந்தனர். இதில் சின்னதுரை தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பலத்த காயமடைந்த குமரேசன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் தப்பிச் சென்ற லாரியை வேளகாநத்தம் அருகே பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இது பற்றி முசிறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அம்பிகா வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் மணப்பாறை ஆவாரம்பட்டி பகுதியை சேர்ந்த சவரிமுத்து (43) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News