செய்திகள்

தென்னை மரத்தில் இருந்து கள் இறக்குவது குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும்: கள் இயக்க தலைவர்

Published On 2017-04-24 02:42 GMT   |   Update On 2017-04-24 02:42 GMT
தென்னை மரத்தில் இருந்து கள் இறக்க அனுமதி அளித்திருப்பது குறித்து தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று கள் இயக்க தலைவர் நல்லசாமி வலியுறுத்தி உள்ளார்.
நெல்லை:

நெல்லையில் நடைபெற்ற தாமிரபரணி பாதுகாப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட நல்லசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் ஒருவித புரிதல் இல்லாத நிலையில் உள்ளனர். நம்மிடம் தாமிரபரணி ஆறு மட்டுமே முழுமையான உபயோகத்தில் உள்ளது. இதை பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. தமிழகம் வறட்சியில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டுமானால் தென்னக நதிகளை மட்டுமாவது இணைக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அரசு தென்னை மரங்களில் இருந்து நீரா பானம் இறக்குவதற்கு அனுமதி வழங்கி உள்ளது. தென்னங் கள் இறக்குவதற்கான அனுமதியை வரவேற்கிறோம். ஆனால் பதநீர், நீரா, கள் என்றால் என்ன? அதை எந்த முறையில் இறக்கி விற்பனை செய்ய வேண்டும் என்று தெளிவான விளக்கத்தை தமிழக அரசு அளிக்க வேண்டும். நீரா என்பது புளிக்காத கள் ஆகும். போலீஸ் துறையும் இது தொடர்பாக உரிய நடைமுறை விளக்கம் அளிக்க வேண்டும்.

மேலும் தமிழகத்தில் தற்போது மூடப்பட்டுள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளில் நீரா பானம் விற்க அனுமதி அளிக்க வேண்டும்.

வருகிற 25-ந் தேதி பொது வேலை நிறுத்தத்துக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். அதே நேரத்தில் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளில் ஒருசிலவற்றில் நியாயம் இல்லை. சிறுநீர் குடித்தல், நிர்வாண போராட்டம் ஆகியவை ஏற்புடையதில்லை. இது தமிழர்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தும். விவசாயிகளுக்கு வங்கிகள் பயிர்க்கடன் வழங்கும் போது அதில் காப்பீட்டு தொகையையும் சேர்த்து விடுகிறார்கள்.

விவசாயம் பாதிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திடமே கடன் தொகையை வசூலிக்க வேண்டும். தற்போது தமிழகம் முழுவதும் வறட்சி நிலை ஏற்பட்டு உள்ளது என்று அரசு அறிவித்து இருப்பதால், விவசாயி மீதான பயிர்க்கடன் தானாகவே ரத்து ஆகிவிடும். எனவே இதை அரசு பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Similar News