செய்திகள்

மதுரையில் குடிபோதையில் தாயை கொன்ற மகன்

Published On 2017-04-22 12:16 GMT   |   Update On 2017-04-22 12:16 GMT
மதுரை அருகே குடிபோதையில் தாயை கீழே தள்ளி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை சிம்மக்கல் பேச்சியம்மன்படித்துறை பகுதியை சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவரது மனைவி கண்ணம்மாள் (வயது72). இவர்களது மகன் தங்கபாண்டி, கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் தங்க பாண்டியின் மனைவி சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் தங்கபாண்டி தாயுடன் வசித்து வந்தார்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான தங்கபாண்டி நள்ளிரவில் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் உள்ள பாத்ரூம் கதவை சரி செய்யாதது தொடர்பாக தாய்-மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த தங்கபாண்டி, வீட்டின் படியில் நின்று கொண்டிருந்த கண்ணம்மாளை கீழே தள்ளினார். கீழே விழுந்த கண்ணம்மாளின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

கொலை குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் திலகர் திடல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து கண்ணம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தங்கபாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News