செய்திகள்

தேவதானப்பட்டி அருகே நகைக்காக அரசு அதிகாரியை கொலை செய்த தரகர்

Published On 2017-04-22 10:07 GMT   |   Update On 2017-04-22 10:07 GMT
தேவதானப்பட்டி அருகே கரும்பு தோட்டத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டவர் அரசு அதிகாரி என்றும் நகைக்காக தரகர் கொலை செய்திருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது.

தேவதானப்பட்டி:

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே வெள்ளிமலை பள்ளிவாசல் பகுதியில் சின்னச்சாமி என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு பெண் மர்மமான முறையில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொலை செய்யப்பட்டவருக்கு சுமார் 55 வயது இருக்கும். அவரது புகைப்படத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகில் உள்ள கீழமட்டையான் கிராமத்தை சேர்ந்த சின்னஇருளாண்டி மனைவி பேச்சியம்மாள் என தெரிய வந்துள்ளது.

கொலை செய்யப்பட்டவர் புள்ளியியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் 2 மகன்களுக்கு திருமணம் ஆகி விட்டது. 3-வது மகனுக்கு பெண் பார்ப்பதற்காக பல தரகர்களிடம் பேச்சியம்மாள் பேசி வந்துள்ளார்.

மேலும் பல ஊர்களுக்கு சென்று தனது மகனுக்காக பெண் பார்த்தும் வந்துள்ளார். அந்த வகையில் கடந்த சில நாட்களாக ஒரு தரகருடன் பேச்சியம்மாள் அடிக்கடி பேசி வந்தார். கடைசியாக வத்தலக்குண்டு அருகே பெண் பார்க்க செல்வதாக வீட்டில் கூறி சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மேலும் அவருடன் சென்ற தரகரின் செல்போன் எண்ணும் கிடைக்க வில்லை. இது மட்டுமின்றி கொலை செய்யப்பட்ட போது பேச்சியம்மாள் அணிந்திருந்த 5 பவுன் நகைகளையும் காணவில்லை. எனவே நகைக்காக தரகர் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

பேச்சியம்மாள் மற்றும் தரகரின் தொலைபேசி உரையாடல் மற்றும் டவர்களை சோதனை செய்து வருகின்றனர். விரைவில் கொலையாளிகளை பிடித்து விடும்வோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

Similar News