செய்திகள்

திலாஸ்பேட்டையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: சிறுவன் தலைநசுங்கி பலி

Published On 2017-04-21 11:01 GMT   |   Update On 2017-04-21 11:01 GMT
திலாஸ் பேட்டையில் இன்று காலை மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தாயின் கண் எதிரே சிறுவன் தலை நசுங்கி பரிதாபமாக இறந்து போனான்.

புதுச்சேரி:

முதலியார்பேட்டை- கடலூர் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் ரகுராமன். இவர் லிங்கா ரெட்டிப்பாளையம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரம்யா. இவர்களது மகன் பக்தவியாசன் (வயது 13). இவன் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

இன்று காலை ரம்யா தனது மகன் பக்தவியாசன் மற்றும் மகளுடன் மோட்டார் சைக்கிளில் அய்யங்குட்டி பாளையத்தில் காவலர் குடியிருப்பில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு சென்றார்.

திலாஸ்பேட்டை பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக ரம்யா ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்ற பக்தவியாசன் லாரியின் சக்கரத்தில் சிக்கி கொண்டான். இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பக்த வியாசன் பரிதாபமாக இறந்து போனான்.

தன் கண் எதிரே மகன் உடல் நசுங்கி இறந்ததை பார்த்து ரம்யா கதறி அழுதார். இது அந்த வழியாக வந்தவர்களின் கண்களையும் குளமாக்கியது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கோரிமேடு போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகையன், உதவி சப்- இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News