நெட்டப்பாக்கத்தில் ரூ.40 லட்சம் டயருடன் லாரியை கடத்திய டிரைவர் கைது
திருபுவனை:
நெட்டப்பாக்கத்தை அடுத்த கல்மண்டபத்தில் ஒரு தனியார் டயர் தொழிற்சாலை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கிருந்து புனேவுக்கு ரூ. 40 லட்சம் மதிப்புள்ள டயர்களை சென்னையை சேர்ந்த ஒரு லாரி மூலம் அனுப்பினார்கள்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த முகமது தில்சாத் (வயது 24) இந்த லாரியை ஓட்டி சென்றார். ஆனால், குறித்த நாளில் புனேவுக்கு லாரி செல்லவில்லை. இதுகுறித்து டயர் தொழிற்சாலை அதிகாரி நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.
கிராமப்புற போலீஸ் சூப்பிரண்டு தெய்வசிகாமணி உத்தரவின் பேரில் நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்-இன்ஸ் பெக்டர் நந்தகுமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடத்தப்பட்ட லாரி உத்தர பிரதேசத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நெட்டப்பாக்கம் போலீசார் உத்தரபிரதேசம் சென்றனர். அங்கு மறைத்து வைத்திருந்த லாரியை மீட்டனர். லாரி டிரைவர் தில்சாத்தை கைது செய்து புதுவைக்கு அழைத்து வந்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில் திருடப்பட்ட டயர்களை உத்தரபிரதசேத்தை சேர்ந்த ராயல்குப்தா மற்றும் ரியல் துரேஷி மற்றும் பலரிடம் விற்றதாக கூறினார். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.