செய்திகள்

கன்னியாகுமரி அருகே மீனவர் வீட்டில் 53 பவுன் நகை கொள்ளை

Published On 2017-04-16 12:22 GMT   |   Update On 2017-04-16 12:22 GMT
கன்னியாகுமரி அருகே நள்ளிரவில் மீனவர் வீட்டில் பீரோவில் இருந்த 53 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் ரொசாரி. மீனவர். இவரது மனைவி நியோனி (வயது 37). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

ரொசாரி கத்தார் நாட்டில் தங்கி மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இங்குள்ள வீட்டில் நியோனி தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

நேற்று நள்ளிரவு 11 மணிக்கு ஈஸ்டர் பிரார்த்தனைக்காக நியோனி அங்குள்ள புனித இன்னாசியார் ஆலயத்துக்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி வீட்டு கதவை பூட்டி விட்டு 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அவர் ஆலயத்துக்கு சென்றார்.

பிரார்த்தனை முடிந்து அதிகாலை 2 மணிக்கு அவர் வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் வீட்டின் அலமாரியில் இருந்த 53¾ பவுன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

நியோனி ஆலயத்துக்கு சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அலமாரியை திறந்து நகையை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

நகை கொள்ளை போனதால் அதிர்ச்சி அடைந்த நியோனி சத்தம் போட்டு கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர்.

நகை கொள்ளை குறித்து கன்னியாகுமரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. வேணுகோபால், இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

அங்கு கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு அங்கு பதிந்திருந்த கொள்ளையர்களின் ரேகைகளை பதிவு செய்தார். மேலும் போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

நியோனி வீட்டில் அதிக நகைகள் இருப்பதை அறிந்த நபரே அவரை பல நாட்களாக கண்காணித்து நள்ளிரவில் அவர் பிரார்த்தனைக்கு செல்வதை பார்த்து இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Similar News