செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கிறார்: டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு

Published On 2017-03-27 10:14 GMT   |   Update On 2017-03-27 10:14 GMT
ஓ.பன்னீர் செல்வம் பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கிறார் என டி.டி.வி. தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதி தண்டையார்பேட்டை ஐ.ஓ.சி. பகுதியில் அ.தி.மு.க. அம்மா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன் தொப்பி சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார். திறந்த ஆட்டோவில் வீதி வீதியாக சென்று ஆதரவு கேட்ட அவருக்கு பெண்கள் மலர்கள் தூவியும் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். கட்சி தொண்டர்கள் தொப்பி அணிந்தவாறு தெருக்களில் ஊர்வலமாக சென்று ஆதரவு திரட்டினர்.

பிரசாரத்தின்போது வேட்பாளர் டி.டி.வி.தினகரன் பேசுகையில், ‘அம்மாவிடம் பதவி சுகம் கண்டவர்கள் இப்போது தி.மு.க.வுடன் சேர்ந்து இரட்டை இலையை முடக்கி இருக்கிறார்கள்.

இந்த தொகுதியில் தொப்பி சின்னத்தில் எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் மீண்டும் இரட்டை இலையை மீட்டெடுப்பேன். இப்பகுதி மக்களின் குறைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பேன். அம்மா விட்டு சென்ற பணிகளையும் தொடர்ந்து செயல்படுத்துவேன்’ என்றார்.

பிரசாரத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜு, மாவட்ட செயலாளர்கள் வெற்றிவேல், பாலகங்கா, வெங்கடேஷ்பாபு எம்.பி. உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News