செய்திகள்

ஆரோவில் கடற்கரை பகுதியில் மாலை 6 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் செல்ல தடை: போலீசார் நடவடிக்கை

Published On 2017-03-22 12:56 GMT   |   Update On 2017-03-22 12:56 GMT
ஆரோவில் கடற்கரை பகுதியில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடற்கரையில் தங்கி இருக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.
 புதுச்சேரி:

புதுவை பல்கலைக் கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்த மேற்கு வங்க மாணவி தனது ஆண் நண்பருடன் இரவில் பொம்மையார் பாளையம் கடற்கரைக்கு சென்ற போது மர்ம நபர்கள் அவரிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியது.

இந்த நிலையில் மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் இதுபோன்ற அத்து மீறல்கள் நடைபெறாத வண்ணம் ஆரோவில் போலீசாரும், கோட்டக்குப்பம் போலீசாரும் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆரோவில் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பொம்மையார் பாளையம், பிள்ளைச்சாவடி ஆகிய கடற்கரை பகுதிகளிலும் கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பெரியமுதலியார் சாவடி, தந்திராயன் குப்பம் ஆகிய கடற்கரை பகுதிகளிலும் அப்பகுதி மீனவர்களை தவிர, மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடற்கரையில் தங்கி இருக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.

நேற்று மாலை முதல் கட்டமாக ஆரோவில் போலீசாரும், கோட்டக்குப்பம் போலீசாரும் கடற்கரையில் திரண்டு இருந்த சுற்றுலா பயணிகளிடம் எச்சரிக்கை செய்தனர்.

அதுபோல் காலாப்பட்டு போலீசாரும் அங்குள்ள கடற்கரையில் நேற்று மாலை முதல் தொடர்ந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

Similar News