மதுரை சிந்தாமணியில் வீடுபுகுந்து பெண்ணிடம் நகை திருடிய வாலிபர் கைது
அவனியாபுரம்:
மதுரை சிந்தாமணி கிழக்கு தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி அன்னகாமு (வயது 44). நேற்று இரவு கதவை சாத்திவிட்டு கணவன்-மனைவி தூங்கிக் கொண்டிருந்தனர்.
நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம ஆசாமி நைசாக வீட்டில் புகுந்து அன்னகாமு கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்தார். அப்போது திடுக் கிட்டு எழுந்த அன்னகாமு நகையை இறுக்கி பிடித்துக் கொண்டு திருடன்... திருடன்... என கூச்சலிட்டார்.
உஷாரான திருடன் அங்கிருந்து தப்ப முயன்றான். இதில் 1¼ பவுன் நகையோடு திருடன் தப்பினான். ¾ பவுன் நகை அன்னகாமு கையில் சிக்கியது.
கொள்ளை சம்பவம் குறித்து அவனியாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ், ஏட்டுகள் தமிழ்ச் செல்வம், மாலா, முனியாண்டி மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது நகையை திருடியது அதே பகுதியை சேர்ந்த சரவணன் (24) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து நகையை மீட்டனர்.