செய்திகள்

தமிழகத்துக்கு நிதி ஒதுக்க அருண் ஜெட்லி உறுதி: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

Published On 2017-03-17 13:25 GMT   |   Update On 2017-03-17 13:25 GMT
தமிழகத்துக்கு நிதி ஒதுக்க மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி உறுதியளித்துள்ளதாக, தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.
புது டெல்லி:

தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் சட்டசபையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட்டின் போது தமிழக அரசுக்கு தற்போது ரூ. 3. 14 லட்சம் கோடி கடன் இருக்கிறது என்று தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையில் மத்திய அரசு நிதியுதவி செய்தால் தமிழகத்தின் கடன் சுமை ஓரளவு குறையும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்துக்கு நிதியுதவி அளிக்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்த, அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். புது டெல்லியில் அருண் ஜெட்லியை சந்தித்த ஜெயக்குமார் தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து அவரிடம் எடுத்துக் கூறினார்.

இந்த நிலையில், தமிழகத்துக்கு தேவையான நிதியை ஒதுக்க அருண் ஜெட்லி உறுதியளித்துள்ளதாக ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.



இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் கூறியதாவது:-

தமிழகத்திற்கு வறட்சி நிவாரணப் பணிக்காக ரூ.39,665 கோடியும், வர்தா புயல் பாதிப்பை சீர்செய்ய ரூ.22,573 கோடியை ஒதுக்கவும் மத்திய மந்திரி அருண் ஜெட்லியிடம் வலியுறுத்தினோம். தமிழகத்தில் 10 திட்டங்களை நிறைவேற்ற 5,145 கோடிகளை மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். தமிழகத்துக்கு நிதி ஒதுக்குவதாக அருண் ஜெட்லி உறுதியளித்துள்ளார்.

இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

Similar News