செய்திகள்

திருக்கனூர் அருகே எல்.ஐ.சி. ஏஜெண்டு வீட்டில் நகை கொள்ளை

Published On 2017-02-24 11:45 GMT   |   Update On 2017-02-24 11:50 GMT
திருக்கனூர் அருகே எல்.ஐ.சி. ஏஜெண்டு வீட்டில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தங்க-வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

திருக்கனூர்:

திருக்கனூர் அருகே லிங்காரெட்டிபாளையம் பச்சைவாழியம்மன் நகரில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன் (வயது37). எல்.ஐ.சி. எஜெண்டாக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு ரவிச்சந்திரன் தனது மனைவி சுமிதா மற்றும் குழந்தைகளுடன் வீட்டின் ஒரு அறையில் தூங்கினார்.

நள்ளிரவு 1 மணியளவில் வீட்டின் மற்றொரு அறையில் இருந்து உருளும் சத்தம் வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ரவிச்சந்திரன் எழுந்து வந்து பார்த்தார். அப்போது அந்த அறையில் இருந்த இரும்பு பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு திடுக்கிட்டார். பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

மர்ம நபர்கள் நள்ளிரவில் வீட்டின் பக்க கதவை நெம்பி திறந்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது தெரியவந்தது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ. 3 லட்சமாகும்.

இதுகுறித்து ரவிச்சந்திரன் காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். மோப்பநாய் சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இந்த கொள்ளை குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தீவிரவிசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி மகக்ளிடம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News