செய்திகள்

ஊட்டி அருகே இன்று காலை காட்டெருமை தாக்கி தொழிலாளி பலி

Published On 2017-01-30 13:48 GMT   |   Update On 2017-01-30 13:48 GMT
ஊட்டி அருகே இன்று காலை காட்டெருமை தாக்கி தொழிலாளி பலி கோவை-07

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள கொலக்கம்பை தூதூர்மட்டம் பகுதியை சேர்ந்தவர் முருகையா (வயது 45). தேயிலை தோட்டத்தொழிலாளி.

இன்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றார். வேலை செய்தபோது புதருக்குள் காட்டெருமை நின்றது. திடீரென ஆவேசமடைந்த காட்டெருமை தொழிலாளியை நோக்கி ஓடி வந்தது.

அதிர்ச்சியடைந்த முருகையா தப்பி ஓடினார். ஆனால் காட்டெருமை முருகையாவை விடாமல் விரட்டி தாக்கியது. முட்டி கீழே தள்ளி அவரை கொம்புகளால் குத்தியது.

இதில் அவருக்கு வயிறு, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தவெள்ளத்தில் முருகையா அலறி சத்தம்போட்டார்.

அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். வெறியுடன் நின்ற காட்டெருமையை விரட்டி விட்டு முருகையாவை மீட்டனர்.

மீட்கப்பட்ட அவரை குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கொலக்கம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News