செய்திகள்

சென்னை மெரினா கடலில் இறங்கி ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் போராட்டம்

Published On 2017-01-23 04:36 GMT   |   Update On 2017-01-23 04:36 GMT
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் ஒருவார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இளைஞர்களை போலீசார் கலைந்து செல்ல அறிவுறுத்தியதால் திடீரென கடலுக்குள் இறங்கி அவர்கள் போராடி வருகின்றனர்.
சென்னை:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் ஒருவார காலமாக  போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இளைஞர்களை போலீசார் கலைந்து செல்ல அறிவுறுத்தியதால் திடீரென கடலுக்குள் இறங்கி அவர்கள் போராடி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த நிரந்தர சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாளர்கள் சென்னை மெரினா கடற்கரையில் போராடி வருகின்றனர்.



சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவுப்படி, போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு இன்று காலையில் இருந்து காவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
 
ஆனால், அங்கிருந்து கலைந்து செல்ல தொடர்ந்து மறுத்துவரும் இளைஞர்கள், கடற்கரையில் மனிதசங்கிலி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தை கைவிட முடியாது எனவும், தங்களால் உடனடியாக எந்த முடிவும் எடுக்க முடியாது எனவும் இளைஞர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் மெரினாவில் ஆங்காங்கே கூட்டமாக இளைஞர்களும், பெண்களும் கடலில் இறங்கியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

எங்களை நெருங்கி வந்து கலைக்க முயற்சித்தால் நாங்கள் கடலுக்குள் சென்று விடுவோம் எனவும் அவர்கள் போலீசாரிடம் கூறி வருகின்றனர். இருப்பினும் பெண்களையும், குழந்தைகளையும் போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர்.

இதற்கிடையே, காலை 9 மணியளவில் சென்னை திருவல்லிக்கேணி சாலை வழியாக மெரினா கடற்கரையை நோக்கி செல்ல முயன்ற சில போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டி அனுப்பினர்.

Similar News