செய்திகள்

தண்டவாளத்தில் கல்லை வைத்து ரெயிலை கவிழ்க்க சதி: நக்சலைட்டுகள் கைவரிசையா?

Published On 2017-01-16 17:39 GMT   |   Update On 2017-01-16 17:39 GMT
தண்டவாளத்தில் கல்லை வைத்து சேலம் ரெயிலை கவிழ்க்க சதி நடந்து உள்ளது. நக்சலைட்டுகள் இந்த கைவரிசையில் ஈடுபட்டனரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிபாளையம்:

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் எஸ்.பி.பி.காலனி பகுதியில் ரெயில்வே தண்டவாளம் செல்கிறது. இந்த வழியாக கடந்த 13–ந் தேதி இரவு சேலத்தில் இருந்து ஈரோடு செல்லும் பயணிகள் ரெயில் சென்று கொண்டு இருந்தது.

அப்போது என்ஜின் முன்பகுதியில் டமார் என்ற சத்தம் கேட்டது. இதையடுத்து என்ஜின் டிரைவர் அனீஸ்குமார் ரெயிலை நிறுத்தி கீழே இறங்கி சென்று பார்த்தார். அப்போது தண்டவாளத்தின் அருகில் நட்டு இருந்த மைல்கல்லை யாரோ பிடுங்கி தண்டவாளத்தின் மேல் வைத்துள்ளதும், ரெயில் என்ஜின் அந்த கல் மீது மோதி பலத்த சத்தம் கேட்டதும் தெரியவந்தது.

இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

நக்சலைட் தீவிரவாதிகள் யாரேனும் தண்டவாளத்தில் கல்லை வைத்து ரெயிலை கவிழ்க்கும் சதியில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்தும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் மற்றும் பள்ளிபாளையம் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் பள்ளிபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News