கிருமாம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்: தொழிலாளி பலி
பாகூர்:
விழுப்புரம் பொய்யப்பாக்கம் மந்தக்கரை வீதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 40) கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்றிருந்தார். சம்பவத்தன்று இவர் அய்யப்பன் கோவில் பிரசாதத்தை புதுவை முள்ளோடையில் உள்ள உறவினர் வீட்டில் கொடுப்பற்காக தனது மனைவி பாஞ்சாலியுடன் மொபட்டில் வந்தார்.
பின்னர் பிரசாதத்தை கொடுத்து விட்டு இருவரும் ஊர் திரும்பி கொண்டு இருந்தனர். முள்ளோடை- குருவிநத்தம் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், விஜயகுமார் ஓட்டி சென்ற மொபட்டும் எதிர்பாரதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் விஜயகுமார் மற்றும் அவரது மனைவி பாஞ்சாலியும், மோட்டார் சைக்கிளில் வந்த அகரம் எழுமேடு பகுதியை சேர்ந்த ரமேஷ், கன்னையன், சந்திரன், ஆகிய 5 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இதில் மேல் சிகிச்சைக்காக விஜயகுமார் சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி விஜயகுமார் நேற்று மாலை பரிதாபமாக இறந்து போனார்.
இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.