கிருஷ்ணகிரி அருகே தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள பெத்தனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 31). விவசாயி.
சம்பவத்தன்று இவர் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி- வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறி எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் கண் இமைக்கும் நேரத்திற்குள் வேகமாக மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய சிவகுமார் தலை மற்றும் கை,கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயம் அடைந்ததன் காரணமாக சிவகுமாரின் நிலைமை கவலை கிடமாக இருந்ததால் இங்கு டாக்டர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் சிவகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துகான காரணம் வேறு ஏதேனும் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.