செய்திகள்

ஊத்துக்கோட்டையில் கோஷ்டி மோதலில் வீடு சூறை: போலீஸ் குவிப்பு

Published On 2016-12-26 10:16 GMT   |   Update On 2016-12-26 10:16 GMT
ஊத்துக்கோட்டையில் கோஷ்டி மோதலில் வீடு சூறையாடப்பட்டது அசம்பாவிதங்கள் எதும் நடக்காமல் தடுக்க நெல்வயல் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள நெல்வாய்யைச் சேர்ந்தவர் விஜயகாந்த். இவர் அதே பகுதியில் பெட்டி கடை நடத்தி வருகிறார்.

இவரது கடைக்கு அதே பகுதி முச்சரம்பாக்கம் காலனியைச் சேர்ந்த சிலர் வந்தனர். அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கேட்டனர். அதற்கு விஜய காந்த் புகையிலை பொருட்கள் இல்லை என கூறினார்.

இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த முரளி (24) விவசாயி விஜயகாந்துக்கு ஆதரவாக வந்தார். அந்த வாலிபர்கள் முரளியை அடித்து உதைத்தனர்.

உடனே பொதுமக்கள் ஒன்று கூடி 2 தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

ஊருக்கு சென்ற 5 பேரும் முக்கரம்பாக்கம் காலனியைச் சேர்ந்த 15 பேருடன் சேர்ந்து முரளி வீட்டுக்கு சென்று மீண்டும் அவரை அடித்து உதைத்தனர். வீட்டையும் சூறையாடினர்.

முரளியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் தாக்குதல் நடத்திய 20 பேரும் தப்பி ஓடி விட்டனர்.

இதனால் மனவேதனை அடைந்த முரளி, வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வெள்ளவேடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து ஊத்துக் கோட்டை போலீசார் தாக்குதல் நடத்திய முக்கரம்பாக்கம் காலனியைச் சேர்ந்த ஜெகன், சரவணன், பிரதிப், அப்பு, தேவா உள்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

மேலும் அசம்பாவிதங்களை தடுக்க ஊத்துக்கோட்டை போலீஸ் சூப்பிரண்டு மாணிக்கம் உத்தரவின் பேரில் முக்கரம்பாக்கம் காலனி, நெல்வயல் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Similar News