செய்திகள்

பள்ளி மாணவி கடத்தல் வழக்கு: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

Published On 2016-11-29 11:14 GMT   |   Update On 2016-11-29 11:14 GMT
திருமண ஆசை காட்டி பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞருக்கு நாமக்கல் நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன்(27). பெயிண்டர் வேலை செய்து வருகிறார். அவருக்கும் ஜேடர்பாளையம் அருகே கூத்தம்பூண்டியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து அவரை பார்த்திபன் திருமண ஆசை காட்டி திருச்சிக்கு அழைத்து சென்றுள்ளார்.

இது தொடர்பாக பெண்ணின் தாயார் வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்படி பார்த்திபனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும், மாணவியை மீட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது.

இந்த வழக்கு நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி மாணவி கடத்தல் மற்றும் பாலியல் பலாத்காரம் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் தலா 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டது. இரண்டு தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Similar News