செய்திகள்

500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை வாபஸ் வாங்க வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை

Published On 2016-11-27 10:53 GMT   |   Update On 2016-11-27 10:53 GMT
மக்களை தவிப்பில் ஆழ்த்தி உள்ள 500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை வாபஸ் வாங்க வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.

அவனியாபுரம்:

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மதுரை அவனியாபுரத்தில் ஒரு திருமண விழாவில் இன்று பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மோடி அரசு கடந்த 8-ந்தேதியில் இருந்து 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது முதல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். நாடும் நிலைகுலைந்துள்ளது. பாராளுமன்றமும் எதிர்க்கட்சிகளின் குரலால் முடக்கப்பட்டுள்ளது.

எனவே ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை மோடி அரசு உடனே வாபஸ் பெற வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் மோடி, உரிய பதில் அளிக்க வேண்டும். நாளை, இடதுசாரிகள் மற்றும் பல்வேறு எதிர்க்கட்சிகள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்பேன். மதுரையில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்கிறேன்.

பொங்கல் பண்டிகையின்போது இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஜல்லிக்கட்டு நடைபெறுவதை நீதிமன்றம் தடுத்து வருகிறது.

மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், பா.ஜனதா தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் ஜல்லிக்கட்டு நடைபெறும் வகையில் தனிச்சட்டம் இயற்ற பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News