செய்திகள்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2016-11-26 17:38 GMT   |   Update On 2016-11-26 17:45 GMT
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு காய்ந்துபோன நெற்கதிர்களை கையில் ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக விவாயிகள் சங்க மாநில செய்தி தொடர்பாளர் வாக்கடை புருஷோத் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர்கள் சிவா, சிவலிங்கம், மாவட்ட செயலாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாம்பசிவம் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், 100 நாள் வேலை திட்டத்தை விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும். ரேஷன் கடைகளில் விவசாயிகளுக்கு விதைகள் வழங்க வேண்டும். விவசாயிகளின் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

மாவட்டத்தில் வறட்சி ஏற்பட்டுள்ளதால், நெற்கதிர்கள் கருகி விட்டன. இதற்கான உரிய இழப்பீடு தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காய்ந்து போன நெற்கதிர்களை கையில் ஏந்தி கோஷமிட்டனர்.

இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News