செய்திகள்

முதல்வரின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட 5 பேருக்கு ஜாமீன்

Published On 2016-11-04 11:55 GMT   |   Update On 2016-11-04 11:56 GMT
முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட 5 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
சென்னை:

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவரது உடல்நிலை குறித்தும், சிகிச்சைகள் குறித்தும் மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது செய்தி வெளியிடுகிறது.

அதேசமயம், முதலமைச்சரின் உடல்நிலை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விரும்பத்தகாத வகையில் செய்திகள் பரவத் தொடங்கின. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, முதல்வரின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்பியதாக சிலர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் பாலசுந்தரம், அந்தோணி ஜேசுராஜ், சதீஷ், சகாயம், மாடசாமி ஆகியோர் ஜாமீன் கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். அப்போது, அவர்களுக்கு ஜாமீன் வழங்க அரசுத் தரப்பு வழக்கறிஞர் எதிப்பு தெரிவித்ததையடுத்து, ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதையடுத்து அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அவர்களின் மனுக்களை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், 5 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

Similar News