செய்திகள்

நெல்லித்தோப்பில் கிறிஸ்தவ பாதிரியாரின் கார் கண்ணாடி உடைப்பு

Published On 2016-10-21 17:33 GMT   |   Update On 2016-10-21 17:32 GMT
நெல்லித்தோப்பில் கிறிஸ்தவ பாதிரியாரின் கார் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி:

புதுவை நெல்லித்தோப்பு சவுரிபடையாச்சி வீதியில் வசித்து வருபவர் வின்சென்ட். இவர் உழவர்கரையில் உள்ள ஒரு தேவாலயத்தில் பாதிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இவர் தனக்கு சொந்தமான காரில் தரங்கம்பாடியில் உள்ள தேவாலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டு விட்டு நள்ளிரவு 2 மணியளவில் வீடு திரும்பினார். காரை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு தூங்க சென்றார்.

இன்றுகாலை பார்த்தபோது காரின் முன்பக்க மற்றும் பின்பக்க கண்ணாடிகள் உடைக்கப்பட்டு சுக்கு நூறாக நொறுங்கி கிடந்ததை கண்டு பாதிரியார் வின்சென்ட் அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்ம நபர்கள் கார் கண்ணாடியை உடைத்து சென்றுள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து பாதிரியார் வின்சென்ட் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெல்லித்தோப்பு தொகுதியில் இடைத்தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் மதகலவரத்தை தூண்டும் வகையில் யாரேனும் இந்த சதி செயலில் ஈடுபட்டிருக்லாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். பாதிரியாரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் நெல்லித்தோப்பு பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே பாதிரியார் வின்சென்டின் கார் கண்ணாடியை மர்ம நபர்கள் 2 முறை உடைத்துள்ளனர். இதுபற்றி அவர் போலீசில் புகார் தெரிவித்தும் இதுவரையில் கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை போலீசார் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News