செய்திகள்
கீதா

வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி சாவில் மர்மம்: தந்தை போலீசில் புகார்

Published On 2016-10-05 07:33 GMT   |   Update On 2016-10-05 07:33 GMT
திருத்தணி அருகே வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி சாவில் மர்மம் இருப்பதாக தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
திருத்தணி:

திருத்தணி அருகே உள்ள அகூர் மணிநகரை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகள் கீதா (வயது 13). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று காலை அவர் வகுப்பறையில் இருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். இதேபோல் அதே பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி மீனாவும் வகுப்பறையில் மயங்கினார்.

இருவரையும் மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி கீதா இறந்தார். மீனாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாணவிகள் கீதாவும், மீனாவும் தோழிகள் ஆவர். அவர்கள் சாப்பிட்ட உணவில் வி‌ஷம் கலந்து இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

அவர்கள் தற்கொலைக்கு முயன்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இதற்கிடையே கீதாவின் தந்தை சுந்தரம் திருத்தணி போலீசில் புகார் மனு கொடுத்தார். அதில் கீதா பள்ளிக்கு சென்றபோது நன்றாக இருந்தார். உணவில் எந்த வி‌ஷமும் இல்லை. பள்ளிக்கு சென்ற பின்னரே அவள் சாப்பிட்ட உணவில் வி‌ஷம் கலந்து உள்ளது.

எனவே கீதாவின் சாவில் மர்மம் உள்ளது. போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி உள்ளார்.

இது தொடர்பாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மீனாவிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன் பின்னரே உணவில் வி‌ஷம் கலந்தது எப்படி என்பது தெரியவரும்.

Similar News