செய்திகள்

கோயம்பேட்டில் கவுன்சிலர் சீட் கிடைக்காததால் அ.தி.மு.க. பிரமுகர் தற்கொலை முயற்சி

Published On 2016-09-27 07:13 GMT   |   Update On 2016-09-27 07:13 GMT
கோயம்பேட்டில் கவுன்சிலர் சீட் கிடைக்காததால் அ.தி.மு.க. பிரமுகர் தற்கொலை முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை:

சென்னை கோயம்பேடு 127-வது வட்ட அ.தி.மு.க. செயலாளராக இருப்பவர் சேகர். விருகம்பாக்கம் சின்மயா நகரில் வசித்து வரும் இவர், நீண்ட காலமாக அ.தி.மு.க.வில் இருந்து வருகிறார்.

நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி 127-வது வார்டில் போட்டியிட சேகர் சீட் கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. ஏற்கனவே இந்த வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்று கவுன்சிலராக இருக்கும் மலைராஜனுக்கே மீண்டும் சீட் கொடுக்கப்பட்டுள்ளது.

கவுன்சிலர் சீட் கிடைக்காததால் மனமுடைந்து காணப்பட்ட சேகர் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். மயங்கி விழுந்த அவரை அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சேகருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் கோயம்பேடு பகுதியில் அ.தி.மு.க.வினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Similar News