செய்திகள்

வீட்டிலேயே மது அருந்தியதை மனைவி கண்டித்ததால் என்ஜினீயர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2016-09-24 17:31 GMT   |   Update On 2016-09-24 17:31 GMT
வீட்டில் மதுகுடித்ததை மனைவி கண்டித்ததால் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி:

புதுவை மூலகுளம் ஜெ.ஜெ. நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் ஆரோக்கியநாதன்பாபு (வயது35). இவருக்கு சுகந்தி ஆந்தோணியம்மாள் (35) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். கடலூரில் கட்டிட பணியை எடுத்து செய்து வந்த ஆரோக்கியநாதன்பாபு மாலையில் வேலை முடிந்ததும் குடும்பத்துக்கு தெரியாமல் மதுகுடித்து விட்டு வருவது வழக்கம்.

ஆனால் நேற்று மாலை மதுக்கடையில் மது குடித்துவிட்டு வராத ஆரோக்கியநாதன்பாபு வீட்டுக்கு மதுபாட்டிலை வாங்கி வந்தார். வீட்டில் மகள்கள் கண் எதிரே ஆரோக்கியநாதன்பாபு மது அருந்தினார். இதனை அவரது மனைவி கண்டித்தார்.

இதனால் கோபமடைந்த ஆரோக்கியநாதன்பாபு விருவிருவன எழுந்து வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்று உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். வெகுநேரமாக கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி சுகந்தி அந்தோணியம்மாள் கதவை தட்டிப்பார்த்தார். ஆனால் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது கணவன் தூக்கில் தொங்குவதை கண்டு சுகந்தி அந்தோணியம்மாள் கதறினார்.

உடனடியாக தூக்கில் இருந்து ஆரோக்கியநாதன் பாபுவை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஆரோக்கியநாதன்பாபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து ரெட்டியார்பாளையம் உதவி சப்-இன்ஸ்பெக்டர் நாகமுத்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News