செய்திகள்

பரமத்தி வேலூரில் தேங்காய் பருப்பு விலை உயர்வு

Published On 2016-09-23 17:03 GMT   |   Update On 2016-09-23 17:03 GMT
பரமத்தி வேலூரில் தேங்காய் பருப்பு விலை உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
பரமத்தி வேலூர்:

பரமத்தி வேலூர் தாலுகாவில் கபிலர்மலை, பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், பாலப்பட்டி, மோகனூர், சோழசிராமணி, ஜேடர்பாளையம், அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிர் செய்யப்பட்டு உள்ளது.

இங்கு விளையும் தேங்காய்களை உடைத்து அதன் பருப்புகளை சிறு வியாபாரிகள் வியாழக்கிழமை தோறும் பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள சேலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வரப்பட்டு தரத்திற்கு தகுந்தார்போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது.

கடந்த வாரம் நடைபெற்ற தேங்காய் பருப்பு ஏலத்தில் 2,761 கிலோ தேங்காய் பருப்பு ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று 59 ரூபாய் 59 பைசாவிற்கும், குறைந்தபட்சமாக 56 ரூபாய் 79 பைசாவிற்கும், சராசரியாக 59 ரூபாய் 19 பைசாவிற்கும் ஏலம் போனது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற தேங்காய் பருப்பு ஏலத்தில் 2,326 கிலோ தேங்காய் பருப்புகள் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று 62 ரூபாய் 76 பைசாவிற்கும், குறைந்தபட்சமாக 58 ரூபாய் 89 பைசாவுக்கும், சராசரியாக 61 ரூபாய் 29 பைசாவிற்கும் ஏலம் போனது. இந்த வாரம் மொத்தம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்து 312–க்கு தேங்காய் பருப்பு விலை போனது. இந்த வாரம் தேங்காய் பருப்பின் வரத்து சற்று குறைந்து இருந்தாலும், அதன் விலை உயர்வு அடைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Similar News