செய்திகள்

ராம்குமார் மரணம்: செப் 27-க்குள் பிரேத பரிசோதனையை முடிக்க நீதிமன்றம் உத்தரவு

Published On 2016-09-22 14:15 GMT   |   Update On 2016-09-22 14:15 GMT
செப் 27-க்குள் மருத்துவரை முடிவு செய்து ராம்குமாரின் பிரேத பரிசோதனையை முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் கடந்த 18-ந்தேதி புழல் சிறையில் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 5 நாட்களாக வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 19-ந்தேதி அன்று ராம்குமார் தரப்பில் ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்யும் குழுவில் எங்களது தரப்பு டாக்டர் ஒருவரும் இடம் பெற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அன்று அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அரசு டாக்டர்கள் 4 பேர் நியமிக்கப்பட்டனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது 2 நீதிபதிகள் மாறுபட்ட கருத்தை தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கு மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்காக பரிந்துரைக்கப்பட்டது.

இதன்படி ராம்குமாரின் பிரேத பரிசோதனை வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக கிருபாகரன் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் “ராம்குமார் உடற்கூறு ஆய்வில் தனியார் மருத்துவருக்குப் பதிலாக எய்ம்ஸ் மருத்துவரை சேர்க்குமாறும், செப் 27-க்குள் மருத்துவரை முடிவு செய்து பிரேத பரிசோதனையை முடிக்குமாறும் உத்தரவு பிறப்பித்தார்.

பிரேத பரிசோதனை வழக்கில் தனியார் மருத்துவரை சேர்க்க வேண்டும் என ராம்குமார் தந்தை பரமசிவம் வைத்த கோரிக்கையை நீதிபதி  நிராகரித்து விட்டார்.

Similar News