சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் போலீஸ் கமிஷனர் ஆய்வு
சென்னை:
சென்னையில் நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி மற்றும் ராணி மேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 இடங்களில் ஓட்டுகள் எண்ணப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.
இந்த 3 மையங்களுக்கும் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அப்போது வாக்குப்பதிவு மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார்.
சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் மற்றும் அதிகாரிகளும் உடன் இருந்தனர். வாக்குகள் எண்ணுவதற்கு ஒரு மாதம் வரையில் இருப்பதால் அதுவரை சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று அந்தந்த பகுதிகளை சேர்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வாக்கு எண்ணும் இடங்களை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என்றும், தேவையில்லாமல் வெளி ஆட்களை வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுமதிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.