செய்திகள்

தமிழக விவசாயிகளின் பொது துறை வங்கி கடனை தமிழக அரசே ஏற்க வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

Published On 2017-04-14 07:36 GMT   |   Update On 2017-04-14 07:36 GMT
தமிழக விவசாயிகளின் பொது துறை வங்கி கடனை தமிழக அரசே ஏற்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உழவர்கள் அனுபவித்து வரும் துயரங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்கள் அடிமனதின் ஆழத்திலிருந்து வெளிவந்த நேர்மையான உணர்வுகள் ஆகும். தமிழ் நாட்டு உழவர்களின் நலனில் எங்கோ உள்ள உச்சநீதி மன்ற நீதிபதிகளுக்கு உள்ள அக்கறைக் கூட தமிழக ஆட்சியாளர்களுக்கு இல்லாதது கவலையளிக்கிறது. அரசின் இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.

விவசாயிகளின் தற்கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு ஆணையிடக் கோரி தொடரப்பட்ட பொதுநலவழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,‘‘தமிழகத்தில் உழவர்களின் தற்கொலை தொடர்பான துயரங்கள் உணர்வுள்ள ஆன்மாவின் மனசாட்சியை உலுக்கிப் பார்க்கும் சக்தி கொண்டவை.

வறட்சி, கடன் தொல்லை மற்றும் வேறு சில காரணங்களால் தான் உழவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். உழவர்களின் காவலன் தமிழக அரசு தான் என்ற முறையில் அவர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டும் அல்லது அதை பேரிடராக கருதி நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். அதை செய்யாமல் அமைதியாக இருப்பது பிரச்சினைகளுக்கு தீர்வு அல்ல’’ என்று கூறி கண்டித்திருக்கிறது.

இந்த பிரச்சினையில் தமிழக அரசின் அலட்சியத்துக்கு இதைவிட கடுமையான சாட் டையடி தர முடியாது. தமிழக உழவர்களின் பிரச்சினைகளைப் பொறுத்தவரை, அவர்கள் ஏதோ செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தவர்கள் போலவும், அவர்களுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதைப் போலவும் தான் தமிழக அரசின் அணுகு முறை உள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் உழவர்கள் வாங்கிய பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்; நிவாரண உதவியை உயர்த்தி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முதல் தில்லி வரை ஏராளமான உழவர் அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

ஆனால், அவர்களை அழைத்து அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிய வேண்டும் என்ற எண்ணம் கூட அரசுக்கு ஏற்படவில்லை. பிப்ரவரி மாதம் முதல் முதல்-அமைச்சர் போட்டியிலும், மார்ச்- ஏப்ரல் மாதங்களில் ராதா கிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலிலும் மட்டும் தீவிரம் காட்டிய ஆட்சியாளர்களால் உழவர்களின் பிரச்சினைகளை கேட்டறிய ஒரு மணி நேரம் ஒதுக்க முடியவில்லை. இதைவிட மோசமான மனிதநேயமற்ற அரசு இருக்கமுடியாது.


உச்சநீதிமன்றத்தின் இந்த கண்டனத்திற்கு பிறகாவது உழவர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண தமிழக அரசு முன்வர வேண்டும். அனைத்துக்கும் மத்திய அரசின் உதவியை எதிர் பார்க்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ள நிலையில், தமிழக விவசாயிகளின் பொதுத்துறை வங்கிக் கடனை தமிழக அரசே ஏற்க முன்வர வேண்டும்.

உத்தரப்பிரதேச அரசு உழவர்களின் கடனை தள்ளுபடி செய்து விட்டு, அதை ஈடுகட்ட மத்திய அரசின் நிதியுதவியை கோருவதைப் போன்று, தமிழக அரசும் பொதுத்துறை வங்கிக்கடனை தள்ளுபடி செய்துவிட்டு மத்திய அரசின் நிதியுதவியைக் கோரலாம். உழவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்தும் விவாதிக்கலாம். இதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் பழனிச்சாமி உடனடியாக கூட்ட வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Similar News