லைஃப்ஸ்டைல்

உப்பு எப்படி உங்கள் குழந்தையின் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது தெரியுமா?

Published On 2016-11-10 02:28 GMT   |   Update On 2016-11-10 05:27 GMT
குழந்தைகளுக்கு உப்பினால் ஏற்படும் அபாயங்களையும் சொல்லிக் கொடுத்து வளர்த்தால், அவர்கள் உப்பு நிறைந்த உணவுகள் உட்கொள்வதைத் தடுக்கலாம்.
இன்றைய குழந்தைகள் பாப்கார்ன், நொறுக்குத்தீனிகள், சிப்ஸ் போன்ற பல உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ணுகிறார்கள். இவை பொதுவாக பெற்றோர்களுக்கு சாதாரணமாக தோன்றினாலும் அவர்கள் வளர வளர இது போன்ற உணவுகளுக்கு அடிமையாகி இது ஒரு பிரச்சனையாக மாற வாய்ப்புள்ளது.

உப்பின் மூலம் விளையும் பாதிப்புகள் உடல் பருமன் மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றையும் தாண்டி பல உடல் நலக் கேடுகளுக்கு வழிவகுக்கும். அதனால் தான் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் இளம் பருவத்தில் உப்பைக் குறைத்து அல்லது உப்பற்ற உணவுகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட வயது வரை குழந்தைகள் உப்புச் சுவைக்கு ஈர்க்கப்பட்டு அதற்கு வாடிக்கையை வளர்த்துக் கொள்வதை தவிர்க்க முடியும்.

உங்கள் குழந்தைகள் ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பை சாப்பிடலாம் என்று உங்களுக்குத் தெரியுமா? ஒரு நாளைக்கு சராசரியாக 1000 முதல் 1500 மில்லி கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இன்றைய குழந்தைகள் இதைப் போன்று இருமடங்கு உப்பை உண்கிறார்கள் என்பது தான் உண்மை.

குழந்தைகள் உப்பு நிறைந்த சிப்ஸ் போன்ற உணவுகளுக்கு பெரியவர்களைப் போல அடிமையாகும் வாய்ப்புள்ளது. இது கடைசி வரை தொடரும் ஒரு ஆபத்தான பழக்கமாகவும் மாறலாம்.

குழந்தைகள் தொடர்ச்சியாக இது போன்று பெரிய வயது வரை உப்பிட்ட பண்டங்களை எடுத்துக் கொண்டால் வாதம், சிறுநீரகக் கோளாறுகள், இதயக்கோளாறுகள் மற்றும் அதிக ரத்த அழுத்தம் ஆகியவை நாள் பட அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது.

பெரும்பாலான பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிக அளவிலான சோடியத்தை (உப்பை) கொண்டிருப்பதால் உங்கள் குழந்தைகளை இதுப்போன்ற உணவுகளிலிருந்து தள்ளியிருக்கச் செய்வது மிகவும் அவசியம். இளம் பருவத்தில் அவர்களுக்கு காய்கறி மற்றும் பழங்களை அதிக அளவு ஊட்டுவதன் மூலம் அவர்கள் உணவுகளுக்காக ஏங்குவதைத் தவிர்த்து ஆரோக்கியமாக வளர்வதை உறுதி செய்ய முடியும்

எனவே உங்கள் குழந்தை ஆரோக்கியமாக வளர வேண்டுமெனில், சிறுவயதில் இருந்தே உணவில் சேர்க்கும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள். இதனால் வளர வளர அவர்களுக்கு உப்பு அதிகம் நிறைந்த உணவுகளின் மீது நாட்டம் ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும் குழந்தைகளுக்கு உப்பினால் ஏற்படும் அபாயங்களையும் சொல்லிக் கொடுத்து வளர்த்தால், அவர்கள் உப்பு நிறைந்த உணவுகள் உட்கொள்வதைத் தடுக்கலாம்.

Similar News