ஆன்மிகம்
கடலூர் தென்பெண்ணை ஆற்றில் மகா ஆரத்தி

கடலூர் தென்பெண்ணை ஆற்றில் மகா ஆரத்தி

Published On 2021-02-26 08:02 GMT   |   Update On 2021-02-26 08:02 GMT
சன்னியாசிகள் கடலூர் தென்பெண்ணை ஆற்றுக்கு தீபாராதனை எடுத்தனர். அதன் பிறகு கலசத்தில் கொண்டு வரப்பட்ட புனித நீர், தென்பெண்ணையாறு கடலில் கலக்கும் தாழங்குடாவில் விசர்ஜனம் செய்யப்பட்டது.
தமிழகத்தில் உள்ள நதிகளை பாதுகாக்கவும், அதன் புனிதத்தன்மையை மேம்படுத்தும் வகையில் அகில பாரதீய சன்னியாசிகள் சங்கத்தினர் கடந்த 2017-ம் ஆண்டு காவிரி பெருவிழாவும் (புஷ்கரம்), 2018-ம் ஆண்டு தாமிரபரணி, 2019-ம் ஆண்டு வைகை பெருவிழாவும் நடத்தினர். இதன் ஒருபகுதியாக தென்பெண்ணை ஆற்றுக்கும் புஷ்கரணி நடத்திட முடிவெடுத்து, கடந்த மாதம் (ஜனவரி) 30-ந் தேதி தென்பெண்ணை ஆறு உற்பத்தியாகும் நந்தி மலையில் இருந்து 7 சன்னியாசிகள் புனிதநீரை எடுத்து, கலசங்களில் நிரப்பி பாதயாத்திரை புறப்பட்டனர்.

தென்பெண்ணையாற்று கரையோரமாக வரும் இந்த சன்னியாசிகள் சுமார் 320 இடங்களில் பூஜையை நடத்தி விட்டு, ஆறு கடலில் கலக்கும் இடமான கடலூருக்கு நேற்று மாலை வந்தடைந்தனர். இக்குழுவினருக்கு சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் தேசிய செயலாளர் சிவராமன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள குமந்தான்மேடு தரைப்பாலத்தில் புதுச்சேரி சுவாமி ஓங்காரனந்தா தலைமையில் மலர்கள் தூவி, ஆரத்தி வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் சன்னியாசிகள் ஆற்றுக்கு தீபாராதனை எடுத்தனர். அதன் பிறகு கலசத்தில் கொண்டு வரப்பட்ட புனித நீர், தென்பெண்ணையாறு கடலில் கலக்கும் தாழங்குடாவில் விசர்ஜனம் செய்யப்பட்டது. இதில், பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News