ஆன்மிகம்
வருஷாபிஷேக விழாவையொட்டி கலசபூஜை நடைபெற்ற போது எடுத்தபடம்.

கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் வருஷாபிஷேக விழா

Published On 2020-01-28 06:56 GMT   |   Update On 2020-01-28 06:56 GMT
கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெங்கடாசலபதி கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கோவிலில் மூலஸ்தானத்தில் வெங்கடாசலபதி தனது வலதுபுறம் ஸ்ரீதேவியும், இடது புறம் பூதேவியும் பக்தர்களுக்கு தரிசனம் தருகின்றனர். மேலும், இங்கு பத்மாவதி தாயார் சன்னதி, ஆண்டாள், கருடாழ்வார் சன்னதியும் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 27-ந்தேதி நடந்தது.

கும்பாபிஷேகம் நடைபெற்று ஓர் ஆண்டு நிறைவடைவதை தொடர்ந்து நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுப்ரபாத சேவை, 9.30 மணிக்கு புண்ணியா வாசனமும், 10 மணிக்கு சுத்த கலச பூஜை, திருமஞ்சனம் சாத்துதல், தொடர்ந்து வெங்கடாசலபதி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் கூடிய பெருமாள் ஆகிய உற்சவசிலைகளுக்குஎண்ணெய், பால், தயிர், இளநீர், பன்னீர், மஞ்சள் பொடி, மற்றும் புனித நீரால் அபிஷேகம், பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வருஷாபிஷேக நிகழ்ச்சியில் சென்னை திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் தகவல் மற்றும் ஆலோசனை மைய தலைவர் சேகர்ரெட்டி, துணைத்தலைவர்கள் ஆனந்தகுமார் ரெட்டி, அனில்குமார் ரெட்டி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மோகன்ராவ், ரெங்கா ரெட்டி, அசோக், சுதர்சனம், பிரதாப் ரெட்டி, அஜய் சுதாகர் ரெட்டி, மயூரி, தேவஸ்தான சிறப்பு ஆலோசகர்கள் வாசுகி, ராஜேந்திரண் துணை செயல் அலுவலர் சங்கர் ராஜூ, உதவி செயல் அலுவலர் மோகன், குமரி மாவட்ட வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News