ஆன்மிகம்
திருவந்திபுரம் ஹயக்கிரீவர் கோவிலில் குழந்தைகள் நெல்லில் எழுதியதை படத்தில் காணலாம்.

திருவந்திபுரம் ஹயக்கிரீவர் கோவிலில் ஏடு படிக்கும் நிகழ்ச்சி

Published On 2019-10-09 04:06 GMT   |   Update On 2019-10-09 04:06 GMT
திருவந்திபுரம் ஹயக்கிரீவர் கோவிலில் நேற்று ஏடு படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாதசாமி கோவில் உள்ளது. நேற்று முன்தினம் ஆயுத பூஜையையொட்டி இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து விஜயதசமி விழாவை முன்னிட்டு நேற்று காலையில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையொட்டி காலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

விஜயதசமி நாளில் தொடங்கப்படும் அனைத்து காரியங்களும் சிறப்பாக அமையும் என்பது ஐதீகமாகும். இந்நாளில் பள்ளிக்கூடங்களில் சேர்க்கப்படும் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. அதே நேரத்தில் விஜயதசமி நாளில் திருவோண நட்சத்திரம் வருவது மற்றொரு சிறப்பாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் தேவநாதசாமி கோவிலுக்கு எதிரே அவுஷதகிரி மலைமீது வீற்றிருக்கும் கல்விக்கு அதிபதியான லட்சுமி ஹயக்கிரீவர் கோவிலில் ஏடு படிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பெற்றோர் தங்களது குழந்தைகளையும் அழைத்து வந்து சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக ஹயக்கிரீவர் சன்னதியில் தரையில் நெல் மற்றும் அரிசியை கொட்டி வைத்து, அதில் பெற்றோர் தங்களது குழந்தைகளின் கை விரலை பிடித்து தமிழில் அ, ஆ என்ற எழுத்துகளை எழுத செய்தனர். இந்த ஏடு படிக்கும் நிகழ்ச்சியில் குழந்தைகளும் ஆர்வத்துடன் பங்கேற்று, தமிழ் எழுத்துகளை எழுதி பழகினர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News