ஆன்மிகம்
தாடிக்கொம்பு சவுந்தரராஜபெருமாள்

தாடிக்கொம்பு சவுந்தரராஜபெருமாள் கோவில் ஆடித்திருவிழா நாளை தொடங்குகிறது

Published On 2019-08-06 06:24 GMT   |   Update On 2019-08-06 06:24 GMT
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில் ஆடித்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்புவில் வரலாற்று சிறப்புமிக்க சவுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடித்திருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக இன்று இரவு 7.30 மணிக்கு மேல் அங்குரார்ப்பணம், வாஸ்துசாந்தி ஆகியவை நடைபெறுகிறது. நாளை காலை 9 மணியிலிருந்து 10.30 மணிக்குள்ளாக கொடியேற்றமும், சூரியபிரபை, சந்திர பிரபை வாகனங்களில் சவுந்தரராஜபெருமாள் எழுந்தருளி தேரோடும் வீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு அன்னவாகனத்திலும், 9-ந்தேதி மாலை சிம்ம வாகனத்திலும், 10-ந்தேதி மாலை கருடவாகனத்திலும், 11-ந் தேதி மாலை சேஷவாகனத்திலும், 12-ந் தேதி மாலை யானை வாகனத்திலும் எழுந்தருளி உலாவருகிறார்.

13-ந் தேதி ஆடி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சவுந்தரராஜ பெருமாளுக்கும், சவுந்தரவள்ளித்தாயார் மற்றும் ஆண்டாளுக்கும் மாலை 6.30 மணியிலிருந்து 7.30 மணிக்குள்ளாக திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து சவுந்தரராஜ பெருமாள், சவுந்தரவள்ளி தாயார், ஆண்டாள், பூமாதேவி மற்றும் ஸ்ரீதேவி சமேதமாக தம்பதியர் கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி தேரோடும் வீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 14-ந் தேதி மாலை குதிரை வாகனத்தில் உலாவருதல் நடக்கிறது.

15-ந்தேதி மாலை 4 மணியளவில் ஆடித்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர். எஸ்.ராமச்சந்திரன், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டு தேரோட்டத்தை தொடங்கி வைக்க உள்ளனர்.

16-ந்தேதி அவரோகணம் நிகழ்ச்சியும், மறுநாள் 17-ந் தேதி சனிக்கிழமை காலை தீர்த்தவாரியும், மாலையில் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் உதவி ஆணையர் அனிதா, செயல் அலுவலர் நாராயணி, கோவில் பட்டாச்சாரியார்கள் ராஜப்பா, ராமமூர்த்தி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

இதையடுத்து திருவிழா ஏற்பாடுகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களின் ஆலோசனை கூட்டம் தாடிக்கொம்பு சவுந்தரராஜபெருமாள் கோவிலில் நேற்று நடைபெற்றது, இதில் தாடிக்கொம்பு வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் சீனிவாசன், தாடிக்கொம்பு பேரூராட்சி செயல் அலுவலர் சுதர்சன், தாடிக்கொம்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் மின்சாரவாரியம், பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News