ஆன்மிகம்
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம் நடந்ததை படத்தில் காணலாம்.

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம் தொடங்கியது

Published On 2019-06-07 03:51 GMT   |   Update On 2019-06-07 03:51 GMT
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பண்ருட்டி திருவதிகையில் பிரசித்திபெற்ற பெரியநாயகி அம்மன் உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, பெரியநாயகி அம்மன், வீரட்டானேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பெரியநாயகி, வீரட்டானேஸ்வரர் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

பின்ன காலை 7.30 மணிக்கு மேளதாளங்கள் முழங்க, குருக்கள் மந்திரங்கள் ஓத கொடிமரத்தில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள், பக்தி கோஷமிட்டனர். இதனை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், இரவில் வெள்ளிபடிச்சட்டத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடந்தது. இதேபோல் தினமும் காலையில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், இரவில் வெவ்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்கிறது.

பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 14-ந் தேதி காலை 7.30 மணிக்கு நடக்கிறது. இரவு 7 மணிக்கு திரிபுரசம்ஹாரம் எனும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற உள்ளது. திரிபுரசம்காரமூர்த்தி தேரிலும், சரநாராயண பெருமாள் கருட வாகனத்திலும் எழுந்தருளி ஐதீக முறைப்படி 3 அரக்கர்களை எரிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

இதன் தொடர்ச்சியாக 15-ந் தேதி காலை 8 மணிக்கு நடராஜர் உற்சவமும், தீர்த்தவாரி உற்சவமும், மாலை 4 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News