ஆன்மிகம்
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2018-03-24 06:06 GMT   |   Update On 2018-03-24 06:06 GMT
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.
108 வைணவ தலங்களில் முக்கிய தலமான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற ஏப்ரல் 1-ந்தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. நேற்று அதிகாலை 5 மணிக்கு ஹரி நாமகீர்த்தனையும், காலை 9 மணிக்கு கொடியேற்றமும் நடந்தது. தேவசம்போர்டு தந்திரி சந்திரநாராயணரு கொடியேற்றினார். கோவில் மேலாளர் மோகனகுமார், ஆதிகேசவ பெருமாள் கோவில் பக்தர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன், பக்தர்கள் சேவா சங்கத்தை சேர்ந்த அனந்தகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு ராமாயண பாராயணம், 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகன பவனி ஆகியவை நடைபெற்றது.

இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு நாராயணிய பாராயணமும், 11 மணிக்கு சுவாமி பவனி வருவதும், மாலை 6.30 மணிக்கு தீபாராதனையும், இரவு 7 மணிக்கு ராமாயண பாராயணமும், 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருவது ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து திருவிழா நாட்களில் சிறப்பு பூஜைகள், சுவாமி பவனி வருவது ஆகியவை நடைபெறுகின்றன.

31-ந்தேதி காலை 8 மணிக்கு ஸ்ரீமத் பாகவத் பாராயணமும், 11.30 மணிக்கு சுவாமி பவனி வருவதும், மாலை 6.30 மணிக்கு தீபாராதனையும், இரவு 7 மணிக்கு ராமாயண பாராயணமும், 9 மணிக்கு கருடவாகனத்தில் சுவாமி பள்ளிவேட்டைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

ஏப்ரல் 1-ந்தேதி காலை 11 மணிக்கு சுவாமி பவனியும், மாலை 4.30 மணிக்கு சுவாமி கருடவாகனத்தில் ஆறாட்டுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் இணைந்து செய்து உள்ளனர்.
Tags:    

Similar News