ஆன்மிகம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா

Published On 2018-03-03 03:15 GMT   |   Update On 2018-03-03 03:15 GMT
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந் தேதி மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இந்த கும்பாபிஷேகம் நடந்து 5 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி வருஷாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, நிர்மாலய பூஜை, விசுவரூப தரிசனம் போன்றவை நடைபெற்றது. காலை 6 மணிக்கு தீபாராதனை, 8 மணிக்கு ஸ்ரீபலிபூஜை, 9 மணிக்கு கலச பூஜை நடந்தது. கலச பூஜையை கோவில் மேல்சாந்தி மணிகண்டன் போற்றி நடத்தினார்.

10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், பன்னீர், இளநீர், தேன், தயிர், குங்குமம், களபம், சந்தனம், மஞ்சள்பொடி, மாபொடி, பஞ்சாமிர்தம், கரும்புசாறு, மாதுளைசாறு, நெல்லிச்சாறு, நெய் ஆகிய 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மேலாளர் சிவராமச்சந்திரன், மேல்சாந்திகள் விட்டல் போற்றி, ஸ்ரீனிவாச போற்றி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மதியம் அன்னதானம் நடைபெற்றது.

இரவு அம்மனுக்கு பலவண்ண புஷ்பாபிஷேகம், ஸ்ரீபலி பூஜை, அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருள செய்து தாலாட்டு நிகழ்ச்சி நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News