ஆன்மிகம்

ஆலங்காடு எனும் திருவாலங்காட்டின் ரகசியம்

Published On 2018-02-16 05:20 GMT   |   Update On 2018-02-16 05:20 GMT
நாம் எல்லோரும் சிதம்பர ரகசியத்தைப் பற்றி அறிந்திருப்போம். அதுபோலவே ஆலங்காடு எனும் திருவாலங்காட்டிலும் ரகசியம் புதைந்துள்ளது.
நாம் எல்லோரும் சிதம்பர ரகசியத்தைப் பற்றி அறிந்திருப்போம். நடராஜப்பெருமான் சிதம்பரம் திருத்தலத்தில் ஆகாய வெளியாக இருப்பதையே ‘சிதம்பர ரகசியம்’ எனப் பெரியோர்கள் கூறியுள்ளனர். அதுபோலவே ஆலங்காடு எனும் திருவாலங்காட்டிலும் ரகசியம் புதைந்துள்ளது. இந்த ஆலங்காட்டு ரகசியம் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

நடராஜர் ஆனந்த நடனமாடிய பஞ்ச சபைகளுள் முதல் தலமாகிறது திருவாலங்காடு. ரத்தினசபை எனப் போற்றப்படும் இங்கு சிவபெருமான் வடாரண்யேஸ்வரர் எனும் பெயரில் அருள்புரிகிறார். இத்திருத்தலம் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

பக்தியில் சிறந்த பெண்மணியான காரைக்கால் அம்மையார், ஒருமுறை சிவபெருமானை சந்திக்க கயிலாயத்திற்கு தலைகீழாக நடந்தே சென்றார். அப்போது ஈஸ்வரனின் அருகிலிருந்த பார்வதிதேவி ‘யார் இவர்?’ என வினவ, அதற்கு ‘என் அம்மை வருகிறார்’ என இறைவன் பதிலளித்தாராம்.



‘அம்மையே உமக்கு என்ன வரம் வேண்டும்?’ என காரைக்கால் அம்மையாரிடம் இறைவன் கேட்க, அதற்கு காரைக்கால் அம்மையார், ‘எப்போதும் உன் நாட்டிய தரிசனம் கிடைக்கும் நல் பாக்கியத்தை அருள வேண்டும் இறைவா’ என வேண்டினார். இறைவனும் ‘அப்படியே ஆகட்டும்’ என அருள்புரிந்தார்.

அதே வேளையில் திருவாலங்காடு நகரை ஆட்சி புரிந்து வந்த மன்னனின் கனவில் தோன்றிய சிவபெருமான், அங்குள்ள தன் கோவிலுக்கு வந்து காரைக்கால் அம்மையார் தங்குவார் எனவும், தனக்குப் பின்புறம் அவருக்காக தனி சன்னிதியை எழுப்பும்படியும் உத்தரவிட்டு மறைந்தார்.

அதன்படியே அம்மன்னனும் நடராஜருக்கு பின்புறம், சன்னிதியில் பாதியை மறைத்து சுவர் எழுப்பினான். அங்கு வந்த காரைக்கால் அம்மையார் அதனுள் ஐக்கியமானார். இன்றும் அங்கு காரைக்கால் அம்மையார் சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தை தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். இதுவே ஆலங்காட்டு ரகசியம் என்றழைக்கப்படுகிறது.
Tags:    

Similar News