ஆன்மிகம்
அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பதையும் பக்தர்கள் குண்டம் இறங்கியதையும் படத்தில் காணலாம்.

மேட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழாவில் குண்டம் இறங்கிய பக்தர்கள்

Published On 2017-04-20 03:11 GMT   |   Update On 2017-04-20 03:11 GMT
மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தில் குஞ்சப்பனை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குண்டம் திருவிழா கடந்த 4-ந் தேதி கணபதி வேள்வியுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து பொரிச்சாட்டுதல், அக்னி கம்பம் நடுதல், திருவிளக்கு பூஜை, பால்குடம் மற்றும் தீர்த்தக்குடம் எடுத்து வருதல் நடந்தது.

பின்னர் குண்டம் திறக்கப்பட்டு, பூ வளர்க்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு பவானி ஆற்றங்கரையில் இருந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வரப்பட்டார்.

ஊர்வலம் காலை 8 மணிக்கு கோவிலை அடைந்ததும் பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் தலைமை பூசாரி வெள்ளிங்கிரி குண்டத்தை வலம் வந்து சிறப்பு பூஜைகளை செய்ததும் குண்டத்தில் மல்லிகை மலர் செண்டு மற்றும் எலுமிச்சை பழத்தை உருட்டி விட்டார்.



தொடர்ந்து பூசாரிகள் பழனிசாமி மற்றும் ராமசாமி கற்பூரத்தட்டு ஏந்தியும், லோகநாதன் கோலமுடி தூக்கியும், கதிர்வேலு சிவன் கரகம் எடுத்தும், புவனேஷ்குமார் சக்தி கரகம் எடுத்தும் குண்டம் இறங்கினர். அவர்களை தொடர்ந்து பெண்கள், மாணவிகள் உள்பட திரளான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். அப்போது சிலர் தங்கள் குழந்தைகளை கையில் தூக்கியவாறு குண்டம் இறங்கியது பார்ப்போரை பரவசமடைய செய்தது.

இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் தலைவர் சென்னியப்பன், உதவி தலைவர் மணி, செயலாளர் தேவண்ணன், உதவி செயலாளர் கிருஷ்ணசாமி, பொருளாளர் அய்யாசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாலை 5 மணிக்கு கற்பக விநாயகர் கோவிலில் இருந்து அலகு குத்தி தேர் இழுத்தல் நிகழ்ச்சி நடந்தது.

Similar News