ஆன்மிகம்
சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி அருள்பாலித்த காட்சி.

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பால் குடம், காவடி எடுத்து பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2017-04-10 05:56 GMT   |   Update On 2017-04-10 05:56 GMT
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் பால் குடம், காவடி எடுத்து சாமி தரிசனம் செய்தனர். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
கோவையை அடுத்த மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கோ பூஜை நடந்தது. பின்னர் சுப்பிரமணிய சுவாமிக்கு 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதன் பின்னர் சுவாமிக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பால்குடம் மற்றும் காவடி எடுத்து வந்த பக்தர்கள் ஆதி மூலஸ்தானத்தில் சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் காலை 8 மணிக்கு பக்தர்கள் எடுத்து வந்த பால் மூலம் சுவாமிக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி திருவீதி உலா நடந்தது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ‘கந்தனுக்கு அரோகரா’, ‘முருகனுக்கு அரோகரா’ என பக்தி கோஷமிட்டனர்.


மருதமலை கோவிலுக்கு பக்தர்கள் அலகு குத்தி பாதயாத்திரையாக வந்த போது எடுத்த படம்.

தொடர்ந்து அர்த்த மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார். பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜைக்கு பின் மகா தீபாராதனையை தொடர்ந்து, தங்க கவசத்தில் சுப்பிரமணியசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன்பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மலையடிவாரத்தில் வேல் கோட்ட தியான மண்டபத்தில் உள்ள வேலுக்கு நேற்று சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பங்குனி உத்திரத்தையொட்டி நேற்று முன்தினம் இரவு முதல் பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பேரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன், வடவள்ளி இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Similar News