ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் கோவில் தேர் திருவிழா: நம்பெருமாள் பல்லக்கில் ஜீயபுரம் சென்றார்

Published On 2017-04-03 05:20 GMT   |   Update On 2017-04-03 05:20 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர் திருவிழாவை முன்னிட்டு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்தார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர் திருவிழா நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று மாலை நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்தார்.

விழாவின் 2-ம் நாளான நேற்று நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு கருடமண்டபம் வந்தடைந்தார். அங்கு மாலை வரை பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.



இரவில் நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு மேலூர் வழியாக ஜீயபுரம் செல்லும் வழியில் வழிநடை உபயங்கள் கண்டருளி இன்று(திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

நாளை(செவ்வாய்க்கிழமை) கருடசேவையும், 5-ந் தேதி காலை சேஷவாகனத்திலும், மாலை கற்பக விருட்ச வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வருகிறார். 9-ந் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர தினத்தன்று ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் தாயார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 10-ந் தேதி நடக்கிறது.

Similar News