ஆன்மிகம்
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2017-04-01 07:58 GMT   |   Update On 2017-04-01 07:58 GMT
விருத்தாசலம் மணவாளநல்லூரில் பிரசித்தி பெற்ற கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
விருத்தாசலம் மணவாளநல்லூரில் பிரசித்தி பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திரம், வசந்த உற்சவம், ஆடி கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி, மாதந்தோறும் வரும் கிருத்திகை தினங்கள், வருடபிறப்பு தினங்கள், பொங்கல், தீபாவளி பண்டிகைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இதில் முக்கிய திருவிழாவாக பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கொளஞ்சியப்பருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து காலை 9 மணிக்கு உற்சவர்களான கொளஞ்சியப்பரும், சித்தி விநாயகரும் சிறப்பு அலங்காரத்தில் கோவில் மண்டபத்தில் உள்ள கொடிமரத்தின் அருகில் எழுந்தருளினார்.



அப்போது குருக்கள் மந்திரங்கள் ஓத, மேளதாளத்துடன் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் விருத்தாசலம், உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதனை தொடர்ந்து தினமும் கொளஞ்சியப்பருக்கும், சித்தி விநாயகருக்கும் அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. வருகிற 8-ந் தேதி காலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடக்க இருக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான பங்குனி உத்திரம் 9-ந் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை மணிமுக்தாற்றில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து கொளஞ்சியப்பரையும், சித்தி விநாயகரையும் வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

இதை தொடர்ந்து மாலையில் சுவாமிக்கு தீர்த்தவாரியும், இரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. விழாவிற் கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதி, செயல் அலுவலர் கருணாகரன், கோவில் மேலாளர் குருநாதன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Similar News