ஆன்மிகம்
திட்டக்குடி முக்களத்தி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.

முக்களத்தி அம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2017-03-30 03:03 GMT   |   Update On 2017-03-30 03:03 GMT
திட்டக்குடியில் முக்களத்தி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திட்டக்குடி வெள்ளாற்றங்கரையில் முக்களத்தி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 20-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு தினசரி மலர் அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேகம் நடைபெற்று வந்தது. 8-வது நாளன்று பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு செய்தனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் இருந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த முக்களத்தி அம்மன் தேரடிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பெண்கள் அம்மனுக்கு பட்டு ஆடை சாத்தியும், மாவிளக்கு மாவு படைத்தும் பிரார்த்தனை செய்தனர்.

இதை தொடர்ந்து பக்தர்கள் கஞ்சி காய்ச்சி அம்மனுக்கு பிரசாதமாக வைத்து வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. பின்னர் முக்களத்தி அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். இதையடுத்து விழாவில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

தேரானது நான்கு தேரோடும் வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதில் திட்டக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.

Similar News