ஆன்மிகம்
மயானக்கொள்ளை விழாவையொட்டி அங்காளம்மன் ஊர்வலமாக வந்தபோது எடுத்த படம்.

தீர்த்தனகிரி அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா

Published On 2017-03-07 04:20 GMT   |   Update On 2017-03-07 04:20 GMT
தீர்த்தனகிரி அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சத்திரம் அருகே உள்ள தீர்த்தனகிரியில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மயானக்கொள்ளை விழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்தாண்டுக்கான மயானக்கொள்ளை விழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயானக்கொள்ளை விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை, பக்தர்கள் ஊர்வலமாக தீர்த்தனகிரி மயானத்திற்கு கொண்டு வந்தனர். அப்போது பக்தர்கள் சிலர், அம்மன், காளி உள்ளிட்ட வேடமணிந்து ஊர்வலமாக வந்தனர்.

தொடர்ந்து அங்கு மயானக்கொள்ளை விழா நடைபெற்றது. அப்போது பக்தர்கள், கொழுக்கட்டை, சுண்டல், உள்ளிட்டவைகளை சாமிக்கு வைத்து படையலிட்டனர். இதில் தீர்த்தனகிரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். விழாவில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Similar News