ஆன்மிகம்
அவினாசி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா
அவினாசி காந்திபுரத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அவினாசி காந்திபுரத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கடந்த 22-ந்தேதி அம்மன் சாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 24-ந்தேதி கொடியேற்றம், நேற்றுமுன்தினம் அதிகாலை அலகு தரிசனம், இரவு 8 மணி முதல் குண்டம் பூ போடுதல், பிரார்த்தனை செலுத்துதல், அம்மனுக்கு வெண்ணை சாத்துதல், இதை தொடர்ந்து 60 அடி குண்டத்தில் விறகு, கரும்பு, நவதானியம் உள்ளிட்ட பொருட்கள் போட்டு அக்னி வளர்க்கப்பட்டது.
பின்னர் காலை 8 மணிக்கு குண்டம் சமன்படுத்தப்பட்டது. நேற்று அம்மன் திருவீதி உலா வந்து காட்சி தந்தார். திரளான ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் உள்ளிட்டோர் விரதம் இருந்து நேற்றுகாலை 9.30 மணியளவில் வரிசையாக குண்டம் இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
அங்காளபரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்ததை படத்தில் காணலாம்
அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை ஆகியவை நடந்தது. இன்று (திங்கட்கிழமை) வேடுபரி, பரிவேட்டை, தெப்பத்தேர் நிகழ்ச்சியும், நாளை (செவ்வாய்க்கிழமை) கொடி இறக்கமும், மஞ்சள்நீர் உற்சவமும் நடக்கிறது. மார்ச் 1-ந்தேதி பேச்சியம்மன் அபிஷேக பூஜையும், 2-ந் தேதி மகாஅபிஷேக உற்சவமும் நடக்க உள்ளது.
குண்டம் திருவிழாவில் அவினாசி, ராயம்பாளையம், மடத்துப்பாளையம், பழங்கரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அங்காள பரமேஸ்வரி அறக்கட்டளையினர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.